ஜூனியர் விகடனில் 16.11.2022 தேதியிட்ட இதழில் "‘பிரசவ வார்டு’ முதல் ‘பிணவறை’ வரை... தலைவிரித்தாடும் லஞ்சம்! - அரசு மருத்துவமனை அவலங்கள்" என்ற தலைப்பில் அரசு மருத்துவமனைகளில் உள்ள லஞ்சம் குறித்து விரிவான அட்டைப்படக் கட்டுரை எழுதியிருந்தோம். அந்த கட்டுரையில் பிணவறையில் தலைவிரித்தாடும் லஞ்சம் குறித்து பல்வேறு தகவல்களைக் குறிப்பிட்டிருந்தோம். அதேபோல, ஒரு கொடூரம் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் நடந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன்(68). நுரையீரலில் பிரச்னை காரணமாக இவர் கடந்த சில மாதங்களாகச் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். தொடர் சிகிச்சைக்குப் பிறகு, அவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனது வீட்டுக்குத் திரும்பியுள்ளார். அப்போது அவருக்கு திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
மருத்துவமனையில் மனோகரனைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, அவரின் உறவினர்கள் மனோகரனின் உடலைக் கேட்டிருக்கிறார்கள். பதிவு செய்துவிட்டதால், பிரேதப் பரிசோதனை செய்த பிறகுதான் உடலைக் கொடுக்க முடியும் என்று மருத்துவமனை தரப்பில் கூறியதாகச் சொல்லப்படுகிறது. அப்போது, அங்கு பணியிலிருந்த மருத்துவ உதவி பணியாளர் இளையராஜா என்பவர் பிணவறையில் உடலை வைப்பதற்கு 500 ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.
மனோகரனின் உறவினர்களும் அவர் கேட்ட பணத்தைக் கொடுத்திருக்கிறார்கள். இருந்தபோதிலும், உடலைப் பிரேதப் பரிசோதனை செய்யக் காலதாமதம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, கொடுத்த பணத்துக்கு ரசீது கேட்டபோது இளையராஜா வாங்கிய பணத்தைத் திரும்பக் கொடுக்க முயற்சி செய்திருக்கிறார். அப்போது மனோகரனின் உறவினர்கள், மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
சம்பவமறிந்து வந்த போலீஸார் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். உறவினர்கள், லஞ்சம் கேட்ட மருத்துவ பணியாளர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இறந்தவரின் உடலைப் பிணவறைக்கு எடுத்துச்செல்ல லஞ்சம் கேட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
from Latest News
0 கருத்துகள்