ஈரோடு அருகே மாமரத்துப்பாளையம் பகுதியில் தனியார் மசாலா நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் இருந்து தினந்தோறும் தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரா, கேரளா என பல்வேறு மாநிலங்களுக்கும் மசாலா பொருள்களான சாம்பார் தூள், மிளகுத்தூள், சிக்கன், மட்டன் மசாலா தூள், மஞ்சள் தூள் போன்றவற்றின் பண்டல்களை லாரியில் ஏற்றி மேலே தார்பாய் கட்டி அனுப்பி வைக்கின்றனர். இந்த லாரிகளை பின்தொடர்ந்து மினி லாரியான டாடா ஏஸ் லாரியில் சென்று பின்னால் ஏறி தார்பாயை கிழித்து மசாலா பண்டல்களை ஓடும் லாரியில் இருந்து திருடிச் செல்வதை ஒரு கும்பல் வழக்கமாகக் கொண்டிருந்தது. வாரத்துக்கு 2, 3 லாரிகளில் இருந்து சுமார் அரை டன் எடையில், சில லட்சங்கள் மதிப்புள்ள மசாலா பொருள்கள் அடங்கிய பண்டல்கள் திருட்டு போவதாக நிறுவனத்தின் சார்பில் சித்தோடு போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து மசாலா பொருள்களை கடத்திச் செல்லும் கும்பல் திருடும் விதம் குறித்து நெடுஞ்சாலை பகுதியிலும், கொச்சின்- சேலம் தேசிய நெடுஞ்சாலையிலும் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை கைப்பற்றி தீவிரமாக விசாரித்தனர். அதில் லாரிகளை பின்தொடர்ந்து மினிலாரிகளில் வரும் நபர்கள் தான் இந்தச் செயலில் ஈடுபட்டு வருவது தெரிய வந்தது.
இதையடுத்து சித்தோடு இன்ஸ்பெக்டர் முருகையன் தலைமையில் எஸ்.எஸ்.ஐ ஸ்ரீரங்கன் உள்ளிட்ட போலீஸார் குழு அமைக்கப்பட்டு தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டது.
சித்தோடு அருகே தேசிய நெடுஞ்சாலை வழியாக லாரியை பின்தொடர்ந்து சென்ற தார்பாய் திருடர்கள் சிலர் `நெடுஞ்சாலை’ திரைப்படத்தில் வருவதை போல மேடான பகுதியில் மெதுவாக லாரி செல்லும் போது பின்பகுதியில் ஏறினர். அவர்கள் கட்டியிருந்த தார்பாயைப் பிரித்து உள்ளே இறங்கி பண்டல்கள் ஒவ்வொன்றாக இறக்கி பின்னால் வந்த மினிலாரியில் ஏற்றிக் கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களை பின்தொடர்ந்து சென்ற சித்தோடு இன்ஸ்பெக்டர் முருகையன் தலைமையிலான போலீஸார் அவர்களை பிடித்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். அவர்களிடம் இருந்து 630 கிலோ எடையுள்ள ரூ.1.40 லட்சம் மதிப்புள்ள மசாலா பாக்கெட்டுகளை கைப்பற்றியதுடன், மதுரை மாவட்டம், நாகமலை புதுக்கோட்டை வடிவேல் கரையைச் சேர்ந்த முருகன் மகன் பிரசாத் (37), மதுரை உசிலம்பட்டி ஏ.கொக்குளம் பன்னியான் தெருவைச் சேர்ந்த பின்னதேவர் மகன் பாரதி (31), மதுரை திருமங்கலம், செக்காவூரணி, கே.புளியம்குளம் வடக்குத் தெருவைச் சேர்ந்த சேகர் என்பவரின் மகன் ரூபன் (24), மதுரை மாவட்டம், நாகமலை புதுக்கோட்டை மேலக்குடியைச் சேர்ந்த சேரூமபாண்டியின் மகன் முத்துகுமார் (49) ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர். இதில் முருகன் மீது ஏற்கெனவே 18 வழக்குகளிலும், பாரதி 3 வழக்குகளிலும் தொடர்பிருப்பது விசாரணையில் தெரிய வந்தது.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் முருகையன் நம்மிடம் கூறுகையில், ``பிடிபட்ட நபர்கள் கடந்த 3 மாதங்களாகவே ஓடும் லாரியில் இருந்து மசாலா பொருள்களை கைப்பற்றி குறைந்த விலைக்கு கடைக்காரர்களிடம் விற்று விடுவார்கள். மேடான பகுதியில் பாரம் ஏற்றிய லாரிகள் மெதுவாகச் செல்லும் போது பின்பகுதி வழியாக ஏறி, லாரியின் தார்பாயை கிழித்து உள்ளே இறங்கும் தார்பாய் திருடர்களான இந்த நால்வர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன. மதுரை, திருச்சி, கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், கரூர் என பல்வேறு மாவட்டங்களிலும் ஓடும் லாரியில் கைவரிசை காட்டியவர்கள் இவர்கள். இதுவரை ரூ.30 லட்சம் மதிப்புள்ள மசாலா பொருள்களை இவர்கள் திருடியிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவர்களிடம் ரூ.2 லட்சம் மதிப்புள்ள மசாலா பொருள்கள் மீட்கப்பட்டுள்ளது. பிடிபட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்” என்றார்.
from Latest News

0 கருத்துகள்