ஈரோட்டில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் தேச ஒற்றுமை மாநாடு நடைபெற்றது. உலமா சபையின் மாநிலத் தலைவர் மௌலானா காஜா பாகவி தலைமை வகித்தார். மக்களவை உறுப்பினர்கள் கணேசமூர்த்தி, நவாஸ் கனி, அந்தியூர் செல்வராஜ், பாதிரியார் ஜெகத்கஸ்பர், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த், ஈரோடு தெற்கு மாவட்டத் தலைவர் மக்கள் ராஜன் முன்னிலை வகித்தனர். மாநாட்டில் அமைச்சர் சு.முத்துசாமி, ``இந்திய நாட்டின் மீதான பற்றை வெளிப்படுத்தும் வகையில் இந்த பிரமாண்டமான மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நம்மிடம் எவ்வளவோ மாறுபட்ட கருத்துகள் இருந்தபோதிலும் நாம் அனைவரும் கைகோத்து நிற்கும் இந்த உணர்வு தான் நமக்கு முக்கியம். தேச ஒற்றுமையை முன்னிறுத்தும் இதுபோன்ற மாநாடுகளே நாட்டிற்கு முக்கியத் தேவையாக உள்ளது. ஒவ்வொருவருக்கும் தனிப்பாதை உண்டு. ஆனால் தேசம் என்று வரும்போது ஒற்றுமையே முக்கியம் என்ற உணர்வை இந்த மாநாடு ஏற்படுத்தி உள்ளது” என்றார்.
காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம், ``கடந்த 4 மாதங்களுக்கு முன் தேச ஒற்றுமையை வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து ராகுல் காந்தியால் தொடங்கப்பட்ட பாத யாத்திரை பயணம் வரும் 30-ஆம் தேதியுடன் காஷ்மீரில் நிறைவு பெறுகிறது. சுதந்திர இயக்கத்தை போல தேச ஒற்றுமை யாத்திரையில் ஒவ்வொரு குடிமகனையும் ஒருங்கிணைத்ததால் தான் இந்த பாதயாத்திரை பெரும் வெற்றி பெற்றது. ராகுல், இந்திய ஒற்றுமை பயணத்தை தொடங்கியபோது, இந்தியா உடைந்து விட்டதா என்று கேள்வி எழுப்பியவர்கள் அதிகம். அவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். ஆயிரக்கணக்கான மொழிகளையும், கலாசாரங்களையும் கொண்டதுதான் இந்தியா. ஆனாலும் வேற்றுமையி்ல் ஒற்றுமை என்பது இந்தியாவில் மட்டுமே சாத்தியம். இங்கு மத ரீதியாகவும், பொருளாதார ரீதியிலும் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்த நினைக்கிறார்கள். இவர்களை புறக்கணிக்க வேண்டிய கட்டாயத்துக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.
நம்முடைய முன்னோர்கள் உருவாக்கிய ஜனநாயகத்தை தான் தற்போதைய ஆட்சியாளர்கள் பலவீனப்படுத்தி வருகிறார்கள். இது ஒரு மதம் மட்டுமே சார்ந்த நாடு அல்ல, பல மதங்களைச் சேர்ந்தவர்களாலும் ஆளப்படும் நாடுதான் இது என்பதை அவர்களுக்கு புரிய வைப்போம்” என்றார்.
தொடர்ந்து நாஞ்சில் சம்பத், ``இருள் சூழ்ந்துள்ள இந்த தேசத்தில் என்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை. சமீபத்தில் ஈரோட்டில் நடைபெற்ற ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் விவாதத்தில் கலந்து கொண்ட போது என்னை உயிரோடு திரும்ப முடியாது என்று மிரட்டினார்கள். அன்று இருந்த அச்சுறுத்தல், எனக்கு இன்றும் இருந்தது. அந்த விவகாரத்தை பெரிதுபடுத்த விரும்பவில்லை.
இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றை சிலர் திரிபுவாதம் பேசி திசை திருப்ப பார்க்கிறார்கள். தேசப்பிதா காந்தியடிகள் சுதந்திர போராட்டத்துக்காக சிறையில் இருந்த போது தன்னுடைய தாய்மொழியான குஜராத்தியில் தனது சுயசரிதையை எழுதினார். ஜவஹர்லால் நேரு, `தி டிஸ்கவரி ஆஃப் இந்தியா’ என்ற நூலை சிறையில் இருந்தபோது தான் எழுதி முடித்தார். ஆச்சார்ய கிருபாலினி இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதற்காக சிறைக்கு சென்றிருந்தபோது தான் வேத உபநிஷத்திற்கான விளக்க உரையை எழுதினார். இப்படி தேசத்துக்காக சிறை சென்றவர்கள் நிறைந்தது நம் நாடு.
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு நடுக்கத்தையும், பொருளாதார நலிவையும் ஏற்படுத்தி சுதேசி கப்பலை பிரிட்டீஷாருக்கு எதிராக இயக்கி அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர் வ.உ.சிதம்பரனார்.
வ.உ.சி. சுதேசி கப்பலை வாங்க நிதியை வாரி அளித்தவர் ஒரு இஸ்லாமியர். தேசப்பிதாவிடம் காதியை முதன்முதலாக கொடுத்தவர் பீவியம்மாள் என்ற இஸ்லாமிய பெண். இளையான்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி இந்திய சுதந்திர போராட்டத்துக்குகாக ரூ.30 லட்சத்தை திரட்டி காந்தியடிகளிடம் கொடுத்தவரும் பீவியம்மாள் தான். அவர் 1924-ல் உயிரிழந்து விட்டார்.
இப்படி நாட்டின் சுதந்திர போராட்டத்துக்காக உடல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பல்வேறு பங்களிப்பை அளித்தவர்கள் ஏராளம். ஆனால் இதுபோன்று இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதாக எந்த வரலாறும் இல்லாதவர்களும், தேசத்தை காட்டிக் கொடுத்தவர்களும், அந்தமான் சிறையில் அடைபட்டு கிடந்தபோது மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து பிரிட்டீஷாரின் காலில் விழுந்து தேசத்தின் தன்மானத்தையும், சுயமரியாதையையும் அடகு வைத்தவர்கள்தான் இன்று தேசபக்தியை பற்றி பேசுகிறார்கள். இன்று அவர்கள் இந்த நாட்டை கோட்சேயின் நாடாக மாற்ற முயற்சிக்கிறார்கள்.
நாம் அவர்களை கண்டு அச்சப்படத் தேவையில்லை.
தற்போது இமாசல பிரதேசத்திலும், ஜார்க்கண்ட், திரிபுராவிலும் அவர்கள் தோல்வையைத் தழுவி விட்டார்கள். ஆர்.எஸ்.எஸ்-ன் தலைமையிடமான நாக்பூரைச் சுற்றி 13 இடங்களில் அவர்கள் தோல்வியை தழுவி விட்டார்கள். எதைச் சொன்னால் நமக்கு கோபம் வருவமோ அதைக்கூறி நம்மை திசை திருப்பப் பார்க்கிறார்கள். எனவே அவர்களை (பாஜகவினரை) புறக்கணியுங்கள். இதைத்தான் தற்போது நம்முடைய முதல்வரும் செய்து வருகிறார். அவர்களை கடுமையாக புறக்கணிக்க நம்முடைய கட்டமைப்பை வலுவாக்குங்கள். அவர்கள் கீழே இறங்கும் வேளை வந்து விட்டது. எனவே நாடு முழுவதும் ஜமாத் அமைப்புகளின் மூலமாக இதுபோன்ற மாநாட்டை நடத்தி அவர்களை புறக்கணியுங்கள்” என்றார்.
from Latest News

0 கருத்துகள்