தமிழகம் முழுவதும் இருக்கும் அரசு மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப் பிரிவு, இதய நோய் பிரிவு, தீவிர சிகிச்சைப் பிரிவு, குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு, புதிதாக பிறந்த குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு, இதய தீவிர சிகிச்சைப் பிரிவு போன்ற முக்கிய சிகிச்சை பிரிவுகள் இயங்கி வருகிறது.
இங்கு தினந்தோறும் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் டயாலிசிஸ் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சமீப காலமாக அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் சிகிச்சை பெயரளவிற்கு மட்டுமே கொடுக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இதற்கு போதுமான அளவு பணியாளர்கள் நியமிக்கப்படாததும், சிகிச்சை உபகரணங்கள் பற்றாக்குறை நிலவி வருவதுமே முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய பெயர் சொல்ல விரும்பாத மருத்துவத்துறை ஊழியர் ஒருவர். "கிட்னி செயலிழக்குக்கும் போது இயற்கையாக அது செய்ய வேண்டிய வேலைகளை செய்ய முடியாது. அப்போது மெஷின் மூலமாக அந்த வேலைகள் செய்யப்படும். இதுவே டயாலிசிஸ் சிகிச்சை ஆகும்.
நோயாளிகளின் நிலையைப் பொறுத்து வாரம் ஒரு முறை முதல் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை வரை டயாலிஸிஸ் செய்து கொள்ள வேண்டும். பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் சிகிச்சை வழங்கக்கூடிய பணியாளர்களுக்கு பற்றாக்குறை நிலவி வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாக புதிய பணியாளர்கள் நியமனம் செய்யப்படவில்லை. பிற பணிகளில் ஈடுபடுபவர்களையும், ஒப்பந்த பணியாளர்களையும் வைத்து தான் சிகிச்சை அளித்து வருகிறார்கள். அதேபோல் உபகரணங்களும் போதுமான அளவுக்கு இல்லை.
இதனால் தனியார் மருத்துவமனைகளுக்கு டயலாசிஸ் சிகிச்சைக்காக பொதுமக்கள் செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். அங்கு ஒரு முறை இந்த சிகிச்சை எடுத்துக்கொள்வதற்கு ரூ.1,200 முதல் ரூ.2,500 வரை செலவு செய்ய வேண்டிய நிலை இருக்கிறது. எனவே இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் செயலாளர் ரவீந்திரநாத். "தமிழகத்தில் சிறுநீரக பாதிப்பை சந்திப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2022-ம் ஆண்டில் மட்டும் தமிழகம் முழுவதும் இருக்கும் அரசு மருத்துவமனைகளில் 3.85 லட்சம் ஹீமோ டயாலிசிஸ் சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது.
ஆனால் போதுமான அளவுக்கு சிகிச்சை அளிக்க பணியாளர்கள் இல்லை. குறிப்பாக 4 நிரந்தர டயலாசிஸ் டெக்னீஷியன்கள் மட்டுமே அரசு மருத்துவமனைகளில் பணியில் இருக்கிறார்கள். மத்திய அரசு மூன்று டயலாசிஸ் படுக்கைகளுக்கு ஒரு டெக்னிஷியன் நியமிக்க வேண்டும் என்று வழிகாட்டுதல்களை வழங்கியிருக்கிறது.
அதன் அடிப்படையில் போதுமான அளவுக்கு பணியாளர்களை நியமிக்க வேண்டும். பல மருத்துவமனைகளில் உரிய சிகிச்சை கிடைக்காததால், பொதுமக்கள் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது" என்றார்.
இது குறித்து சுகாதாரத்துறை செயலாளர் செந்தில் குமாரிடம் விளக்கம் கேட்டோம். "பல இடங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள். கொரோனா காரணமாக புதிய பணியாளர்கள் நியமனம் செய்வதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது.
அதை சரி செய்வதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் எப்போது பணியமர்த்துவோம் என்று நேரம் சொல்ல முடியாது. டயாலிசிஸ் சிகிச்சை உபகரணங்கள் தேவைப்படும் மருத்துவமனைகளுக்கு சமீபத்தில் கூட வழங்கினோம். தற்போதைய நிலவரப்படி 1,100 டயலாசிஸ் சிகிச்சை உபகரணங்கள் செயல்பாட்டில் இருக்கிறது" என்றார்.
from Latest news

0 கருத்துகள்