Header Ads Widget

அரசு மருத்துவமனைக்குள் புகுந்து கைதிகளை வெட்ட முயன்ற மர்ம கும்பல் - விருதுநகரில் அதிர்ச்சி சம்பவம்

விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குள் புகுந்து சிகிச்சை பெற்று வந்த சிறைக்கைதிகளை கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் பேசுகையில், "திண்டுக்கல் மாவட்டத்தில் சின்னத்தம்பி என்பவரை கொலைசெய்த குற்றத்திற்காக, அதே மாவட்டம் மேட்டுப்பட்டி மொட்டைப்பட்டி ரோட்டை சேர்ந்த விக்னேஷ் என்ற விக்ணு(வயது 29), வேடப்பட்டி ஒத்தால்பாலம் அபிராமி நகரை சேர்ந்த யுவராஜ்குமார்(28) ஆகிய இருவரையும் கடந்த மாதம் போலீஸார் கைது செய்தனர்.

க்ரைம்

தொடர்ந்து நிர்வாக காரணங்களுக்காக, விக்னேஷும், யுவராஜ்குமாரும் விருதுநகர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் திடீர் உடல் நலக்குறைவு ஏற்படவும், விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் அவர்கள் தொடர்ந்து 4-வது நாளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதுகாப்புப் பணிக்கென சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அந்தவகையில் காவலர்கள் சிலம்பரசன் மற்றும் அழகுராஜா ஆகியோர் நேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் விக்னேஷும், அழகுராஜாவும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த வார்டுக்குள், திடீரென முகமுடி அணிந்துக்கொண்டு பயங்கர ஆயுதங்களுடன் 5 பேர் கொண்ட மர்ம கும்பல் உள்ளே புகுந்துள்ளது.

முன்னரே அவர்கள் போட்டுவைத்திருந்த திட்டத்தின்படி, பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் சிலம்பரசன், அழகுராஜா ஆகியோர் மீது மிளகாய்பொடியை தூவிவிட்டு சிறைக்கைதிகளை இருவரையும் அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் கைதிகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுதாரித்துக்கொண்டு காவலர்கள், மர்மகும்பலை துப்பாக்கியை காட்டி தடுத்து நிறுத்தியுள்ளனர். தொடர்ந்து சிறைக்கைதிகளை தனியே ஒரு அறையில் வைத்து பூட்டிவிட்டு, கைதிகளை வெட்டவந்த மர்ம கும்பலை நோக்கி துப்பாக்கியால் சுட்டு விடுவேன் என மிரட்டி சுடுவதற்கு ஆயத்தமானதும் கொலைசெய்ய வந்தவர்கள் பயந்து அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டனர்.

மருத்துவமனைக்குள் நடைபெற்ற இந்த சம்பவத்தால் அங்கு சிகிச்சையிலிருந்த நோயாளிகளும், பொதுமக்களும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். சம்பவம் குறித்து தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாச பெருமாள் மற்றும் காவல் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவத்தில் காயமுற்ற இரு கைதிகளுக்கும் முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கைதிகளை மருத்துவமனைக்குள் புகுந்து வெட்ட முயற்சித்த மர்மகும்பலை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது" என போலீஸார் தெரிவித்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கிழக்குக் காவல்நிலைய போலீஸார், கொலை செய்ய முயற்சி செய்த கும்பல் குறித்து விசாரணை நடத்தியதில் திண்டுக்கல்லில் கொலைசெய்யப்பட்ட சின்னதம்பியின் உறவினர்களான விஜி, நட்டுராயன், ஒலிசை குமார், குணம், பரமசிவம் ஆகிய 5 பேர்‌ என தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக போலீஸார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.



from Latest news

கருத்துரையிடுக

0 கருத்துகள்