கேரள மாநிலம் கோழிக்கோடு எலத்தூரில் ஓடும் ரயிலில் பயணிகள் மீது கடந்த 2-ம் தேதி பெட்ரோல் ஊற்றி தீவைத்த சம்பவம் நாட்டை உலுக்கியது. இந்த சம்பவத்தில் மூன்று பேர் உடல் ரயில் தண்டவாளத்தில் இருந்து மீட்கப்பட்டன. அவர்கள் தீ-யில் இருந்து தப்பிக்க ரயிலில் இருந்து குதித்தார்களா, அல்லது தள்ளிவிடப்பட்டார்களா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஷாரூக் ஷைபி-யை 11 நாள் காவலில் எடுத்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. ஷாரூக் ஷைபி-யிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. டெல்லியில் இருந்து சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸில் கேரளா வந்துள்ளதாக ஷாரூக் ஷைபி வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். அது உண்மைதானா என்பதை உறுதிப்படுத்த புதுடெல்லி ரயில் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி கேமரா காட்சிகளை விசாரணைக்குழு சேகரித்து, ஆய்வு செய்துவருகிறது. மேலும் கேரளத்தின் சொர்னூர் வந்த அவர் ரயில் நிலையத்தில் இறங்கி ஆட்டோ பிடித்து ஒன்றரை கிலோமீட்டர் தூரம் சென்று ஒரு பெட்ரோல் பங்கில் பாட்டில்களில் பெட்ரோல் வாங்கியுள்ளார். சொர்னூர் ரயில் நிலையம் அருகே பெட்ரோல் பங்க் இருந்தும் அவர் அவுட்டரில் சென்று பெட்ரோல் வாங்கி உள்ளார்.
ரயில் நிலையத்தில் மீட்கப்பட்ட பேக் ஷாரூக் ஷைபிக்கு சொந்தமானது எனவும், டைரியில் உள்ளது அவரது கையெழுத்து எனவும் தெரியவந்துள்ளது. ரயில் இருந்து தப்பிச்செல்லும்போது பேக் தவறி விழுந்துள்ளதாக ஷாரூக் தெரிவித்துள்ளார். அதே சமயம் ரயிலில் இருந்து யாரையும் தள்ளிவிடவில்லை என ஷாரூக் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நேற்று விசாரணை நடத்தும்போது ஷாரூக் ஷைப் தனக்கு உடல்நலக்குறைவு உள்ளதாக போலீஸிடம் தொடர்ந்து சொல்லிகொண்டிருந்தார். இதையடுத்து அவரை ஆஸ்பத்திரியில் பரிசோதனைக்காக அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஷாரூக் ஷைப்பிற்கு உடலில் எந்த பிரச்னையும் இல்லை என தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து அவரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஷாரூக் ஷைப் தனது செல்போனில் கடைசியாக அழைத்த எண்களை போலீஸார் ஆய்வு செய்தனர். அவை அனைத்தும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் ஷாரூக் ஷைபி-க்கு பயங்கரவாத தொடர்பு இல்லை என கூறிவிட முடியாது என என்.ஐ.ஏ-வின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே ஷாரூக் ஷைபி-யின் பயங்கரவாத தொடர்பு குறித்து என்.ஐ.ஏ விசாரணை நடத்தி வருகிறது.
தாக்குதலுக்கு கேரளா மாநிலத்தை தேர்ந்தெடுத்தது ஏன் என்ற கேவிக்கு விடைதேடுகிறது போலீஸ். எலத்தூர் பகுதியில் ஹிந்துஸ்தான் பெட்ரோலின் டெப்போ ஒன்று உள்ளது. அதன்மூலம் பெரும் விபத்து எற்படுத்த திட்டமிடப்பட்டதா, பாலத்தின் மீது ரயில் செல்லும் சமயத்தில் தீ வைக்கப்பட்டுள்ளதன் பின்னணியிலும் பெரிய சதித்திட்டம் உள்ளதா எனவும் விசாரிக்க என்.ஐ.ஏ தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது. ஷாரூக் மீது யு.ஏ.பி வழக்கு பாய்ந்தால், இந்த வழக்கை என்.ஐ.ஏ கையில் எடுத்து விசாரிக்க வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.
from Latest news

0 கருத்துகள்