`Open AI' என்ற நிறுவனத்தின் தயாரிப்புத்தான் இன்று பிரபலமாகி வரும் 'ChatGPT' செயலி.
எலான் மஸ்க், சாம் ஆல்ட்மேன், கிரெக் ப்ரோக்மேன், ரீட் ஹாஃப்மேன் உள்ளிட்ட பெரும் டெக் ஜாம்பவான்களால் 2015ம் ஆண்டு உருவாக்கப்பட்டது இந்த `Open AI' என்ற நிறுவனம். பின்னர், அது பலரிடம் கைமாறி இன்று சாம் ஆல்ட்மேன் என்பவர் வசமிருக்கிறது.
சமீபத்தில் ChatGPT மற்றும் Open AI நிறுவனம் பற்றி எலான் மஸ்க் பேசுகையில், "'Open AI' அனைவரும் பயன்படுத்தும் வகையில் 'Open source'-ஆக லாப நோக்கமற்று இருக்க வேண்டும். ChatGPT-யின் சேவையை இலவசமாக வழங்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். ஆனால் அதில் அதிக லாபம் ஈட்ட மைக்ரோசாப்ட் திட்டமிட்டுள்ளது. இது முற்றிலும் தவறான போக்கு" என்று எச்சரித்திருந்தார்.
மற்றொருபுறம் ChatGPT-யின் வருகைக்குப் பிறகு பல டெக் நிறுவனங்கள் ChatGPTக்கு போட்டியாக AI செயலிகளை உருவாக்குவதிலும், மேம்படுத்துவதிலும் அதிதீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் எலான் மஸ்க்கும் இந்த AI ரேஸில் 'TruthGPT' எனும் AI செயலியைக் ChatGPTக்குப் போட்டியாகக் களமிறக்கியுள்ளார். இதுபற்றி கூறியுள்ள எலான், "நான் 'TruthGPT' AI செயலியை உருவாக்கவிருக்கிறேன். இது முடிந்த அளவிற்குச் சரியான உண்மையைத் தேடி கண்டுபிடித்து சிறந்த பதில்களைத் தரும் AI செயலியாக இருக்கும். அதுமட்டுமன்றி இது பிரபஞ்சத்தையும், மனிதர்களையும் பற்றிச் சரியாகப் புரிந்துகொள்ளும் தன்மை கொண்டதாக இருக்கும். மனிதர்கள் இந்த உலகிற்கு அவசியமானவர்கள் என்பதை உணர்ந்ததாக இருக்கும். இதனால் எந்தவித ஆபத்தும் இருக்காது, நிச்சயம் பாதுகாப்பானதாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.
from Latest news

0 கருத்துகள்