Header Ads Widget

வேலூர்: செங்கல் சூளையில் குபீரென்று கிளம்பிய புகை; தூக்கத்தில் பிரிந்த தம்பதி உயிர் - என்ன நடந்தது?

வேலூர் மாவட்டம், கணியம்பாடி அடுத்த புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தெய்வசிகாமணி, வயது 40. இவரின் மனைவி அமுல், வயது 30. இந்தத் தம்பதிக்கு 16 வயதில் சந்தியா, 14 வயதில் சினேகா என்று 2 மகள்களும், 12 வயதில் அரவிந்த் என்று ஒரு மகனும் இருக்கின்றனர். தெய்வசிகாமணியும், அவர் மனைவி அமுலுவும் அதே கிராமத்திலுள்ள பழனிவேல் என்பவருக்குச் சொந்தமான செங்கல் சூளையை கடந்த 15 ஆண்டுகளாகக் குத்தகை அடிப்படையில் நடத்திவருவதாகக் கூறப்படுகிறது. தம்பதி இருவரும் தினமும் பகல் வேளையில் சூளையில் வேலை செய்துவிட்டு, இரவில் வீட்டுக்குச் சென்றுவிடுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

உயிரிழந்த தம்பதி

இந்த நிலையில், நேற்று இரவு செங்கல் சூளையில் செங்கற்களை வேக வைப்பதற்காக தீ மூட்டினர். அப்போது, தெய்வசிகாமணியும், அவர் மனைவி அமுலுவும் சூளைக்கு பக்கவாட்டில் இறக்கப்பட்டிருக்கும் தகர ஷெட்டுக்குள் தங்கினர். மழை பெய்ததால், செங்கல் சூளையில் மூட்டப்பட்ட தீ அணையாமல் இருப்பதற்காக, சூளையைச் சுற்றியும் தார்ப்பாய் கொண்டு மூடினர். விடிய, விடிய மழை கொட்டித் தீர்த்த காரணத்தினால், தீ அணைந்து குபீரென புகை கிளம்பியது.

இதனால், அந்தப் பகுதியே புகை மண்டலமாக மாறியது. சூளைக்கு பக்கவாட்டில் இறக்கப்பட்ட தகர ஷெட்டில், படுத்திருந்த தெய்வசிகாமணியும், அவர் அருகில் நாற்காலியில் அமர்ந்தபடி தூங்கிக்கொண்டிருந்த அமுலுவும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், மயக்கமடைந்தனர். இன்று காலை, இருவரையும் கண்ட அந்தப் பகுதி மக்கள், அவர்களை மீட்டு வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர்.

வேலூர் தாலுகா காவல் நிலையம்

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், தெய்வசிகாமணியின் ‘உயிர்‘ தூக்கத்திலேயே பிரிந்துவிட்டதாகத் தெரிவித்தனர். அவர் மனைவி அமுலு மட்டும் மிக ஆபத்தான நிலையில் இருந்ததால், அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்தனர். துரதிர்ஷ்டவசமாக சில நிமிடங்களில், அமுலுவின் உயிரும் பிரிந்தது. இதையடுத்து, தம்பதியின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது. இந்த துயரச் சம்பவம் குறித்து, வேலூர் தாலுகா காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவுசெய்து, தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். தாய், தந்தையைப் பறிகொடுத்த துக்கத்தில் மூன்று பிள்ளைகளும் தவித்துவருகின்றனர். இந்தச் சம்பவத்தால், அந்தப் பகுதி மக்கள் மிகவும் வேதனைக்குள்ளாகியிருக்கின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY



from Latest news

கருத்துரையிடுக

0 கருத்துகள்