Header Ads Widget

திருமணம் எங்களை பிரிக்க முடியாது - ஒரே மணமகனை மணந்த இரட்டை சகோதரிகள்; போலீஸில் புகார்; நடந்தது என்ன?

மும்பை அந்தேரியை சேர்ந்தவர் அதுல் உத்தம். இவர் டிராவல் ஏஜென்சி நடத்தி வருகிறார். காந்திவலியை சேர்ந்தவர்கள் பிங்கி, ரிங்கி. இரட்டையர்களான இச்சகோதரிகள் இரண்டு பேரும் தகவல் தொழில் நுட்பத்துறையில் பொறியியல் படிப்பு படித்துவிட்டு ஒரே கம்பெனியில் வேலை செய்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இரட்டையர்களின் தந்தை இறந்து போனார். இதையடுத்து இருவரும் தாயாரின் பராமரிப்பில் வசித்து வந்தனர்.

அப்போது, அவர்களின் தாயார் விபத்தில் சிக்கிய போது அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று வருவதில் அதுல் இரண்டு சகோதரிகளுக்கும் உதவினார். இதனால் அவர்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டது. சகோதரிகள் இரண்டு பேரும் அதுலை திருமணம் செய்ய விரும்பினர். அவர்கள் தாயாரும் இதற்கு சம்மதம் தெரிவித்தார்.

இதையடுத்து அவர்களின் சொந்த ஊரான சோலாப்பூர் அருகில் உள்ள அக்லுஜ் என்ற இடத்தில் இருக்கும் ஹோட்டலில் உறவினர்கள் புடைசூழ திருமணம் நடந்தேறியது. இத்திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி இருக்கிறது. இதையடுத்து சமூக சேவகர் ராகுல் என்பவர், இது குறித்து போலீஸில் புகார் செய்தார். போலீஸார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சட்டத்தை மீறி இரண்டு பேர் ஒரே வாலிபரை திருமணம் செய்தது குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி மாநில பெண்கள் கமிஷன் தலைவர் ரூபாலி சோலாப்பூர் போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளனர்.

புதுமணத்தம்பதி

இது குறித்து மணமகனின் உறவினர் ஒருவர் கூறுகையில், ``சகோதரிகள் இரண்டு பேரும் சின்ன வயதில் இருந்தே அனைத்தையும் ஒன்றாக பகிர்ந்து கொண்டனர். ஒரே பள்ளி, கல்லூரியில் படித்தது வேலை செய்வது உட்பட அனைத்தையும் சேர்ந்தே செய்கின்றனர். திருமணம் தங்களை பிரித்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் இருவரும் ஒருவரையே திருமணம் செய்து கொண்டனர்” என்றார்.

முதலில் இரண்டு சகோதரிகளில் ஒருவருக்குத்தான் அதுல் மீது காதல் ஏற்பட்டது. ஆனால் திருமணம் செய்தால் எங்கள் இரண்டு பேரையும் சேர்த்தே திருமணம் செய்து கொள்ளவேண்டும் அவர் அதுலிடம் சொன்னார். அதுலும் தனது பெற்றோரிடம் கேட்டு அதற்கு சம்மதம் தெரிவித்தார் என்கிறார்கள் உறவினர்கள்.



from தேசிய செய்திகள் https://ift.tt/zSwLDeW
via IFTTT

கருத்துரையிடுக

0 கருத்துகள்