நாடு முழுவதும், லவ் ஜிகாத் பிரச்னையை இந்து அமைப்புகளும், பா.ஜ.க ஆளும் மாநிலங்களும் பெரிய அளவில் எழுப்பி வருகின்றன. சில மாநிலங்கள் லவ் ஜிகாத்துக்கு எதிராக சட்டம் கொண்டு வரவும் திட்டமிட்டிருந்தனர். சமீபத்தில் டெல்லியில் மும்பையை சேர்ந்த ஷ்ரத்தா என்ற இந்துப்பெண் பூனாவாலா என்ற மாற்று மதத்தை சேர்ந்த காதலனால் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தை தொடர்ந்து மகாராஷ்டிரா அரசு கடந்த சில நாள்களுக்கு முன்பு வேறு மதத்தை சேர்ந்தவர்களை திருமணம் செய்யும் பெண்கள் பட்டியலை சேகரிக்க 13 பேர் கொண்ட கமிட்டியை அமைத்திருந்தது.
இந்தக் கமிட்டி மாநிலம் முழுவதும், மாவட்டம் வாரியாக சாதி மற்றும் வேறு மதத்தை சேர்ந்தவர்களை திருமணம் செய்த பெண்களை கணக்கெடுப்பு நடத்துவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. மங்கள் பிரபாத் லோதா தலைமையில் அமைக்கப்பட்ட இந்தக் கமிட்டி, ``வீட்டை விட்டு வெளியேறிய பெண்கள், பதிவுத்திருமணம் செய்த பெண்கள் குறித்த விபரங்களை சேகரிப்பார்கள். அதோடு அந்தப் பெண்களுக்கு தேவையான உதவிகள், கவுன்சிலிங் கொடுப்பார்கள்.
அதோடு வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்த பெண்கள் குடும்பத்தோடு தொடர்பில் இருக்கிறார்களா என்ற விபரத்தையும் இந்தக் கமிட்டி கேட்டறியும். சாதி, மதம் மாறி திருமணம் செய்த பெண்கள் தங்களது குடும்பத்தினரிடம் தொடர்பில் இல்லாத பட்சத்தில் அரசு அமைத்திருக்கும் கமிட்டி அந்தப் பெண்களை தொடர்பு கொள்ளும். திருமணத்துக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தால் அந்தப் பெண்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்படும்'' என்று அரசு வெளியிட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் பெண்களின் புகார்களை பெற தனி ஹெல்ப்லைன் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு பெண்கள் அமைப்புகள், அரசியல் கட்சிகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இதையடுத்து கலப்புத்திருமணம் செய்தவர்கள் அதாவது வேறு சாதியை சேர்ந்தவர்களை திருமணம் செய்யும் பெண்கள் பற்றிய கணக்கெடுக்கெடுப்பு நடத்தப்படாது என்று இந்தக் கமிட்டியின் தலைவர் மங்கல் பிரபாத் லோதா தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ``தவறுதலாக கலப்பு திருமணம் செய்தவர்கள் பற்றி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று கூறிவிட்டோம். வேறு மதத்தை சேர்ந்தவர்களை திருமணம் செய்யும் பெண்கள் பற்றி மட்டுமே விபரங்கள் சேகரிக்கப்படும். அரசு யாரது வாழ்க்கையிலும் தலையிடாது. குடும்பத்திலிருந்து விலகி இருக்கும் பெண்களுக்கு உதவத்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. அதுவும் புகார் வந்தால் மட்டுமே நடவடிக்கை எடுப்போம்'' என்று தெரிவித்தார்.
இது குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜிதேந்திர அவாத் அளித்த பேட்டியில், ``பாபாசாஹேப் அம்பேத்கர் முதன் முதலில் பிராமண பெண்ணை திருமணம் செய்து சாதித்தடையை உடைத்தார். அரசின் உத்தரவுக்கு இந்துக்களே எதிர்ப்பு தெரிவித்ததால் கலப்பு திருமணம் செய்தவர்கள் பற்றிய கணக்கெடுப்பு நடத்தபடாது என்று அரசு தெரிவித்திருக்கிறது.” என்றார்.
``மற்றொரு ஷ்ரத்தா போன்ற சம்பவம் நடக்காமல் இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் இந்தக் காரியத்தில் ஈடுபட்டு இருப்பதாக மாநில அரசு தெரிவித்திருக்கிறது. ஆனால் ஷ்ரத்தா படுகொலையை பா.ஜ.க அரசியலாக்கி வருகிறது” என மகாராஷ்டிரா காங்கிரஸ் பொதுச்செயலாளர் சச்சின் சாவந்த் குற்றம் சாட்டி இருக்கிறார்.'' என்றார்.
from Latest News

0 கருத்துகள்