Header Ads Widget

கொலை முயற்சி வழக்கில் சிக்கிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விடுவிப்பு - வழக்கின் பின்னணி என்ன?!

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர், ஆறுமுகநேரி நகர தி.மு.க செயலாளராக இருந்தார். இவரை கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி காலை 11.15 மணியளவில் ஆறுமுகநேரி பள்ளிவாசல் பஜாரில் வைத்து, சிலர் கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்றனர். இது தொடர்பாக ஆறுமுகநேரி காவல் நிலையப் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.  தற்போதைய மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும்,  அப்போதைய திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராகவும்  இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் தூண்டுதலின் பேரில்தான் தன்னைக் கொலை செய்ய முயன்றதாக சுரேஷ் வாக்குமூலம் அளித்தார்.

அனிதா ராதாகிருஷ்ணன்

அதன் அடிப்படையில், இந்த வழக்கில்  அனிதா ராதாகிருஷ்ணன் 7-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சசி என்ற சசிகுமார், மணிகண்டன், ஆல்நாத் ஆகிய மூவரும் வழக்கு விசாரணை தொடங்குவதற்கு முன்பே உயிரிழந்து விட்டனர். எனவே, பாலா என்ற பாலகிருஷ்ணன், கோபி, குமார் என்ற உதயகுமார், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகிய 4 பேர் மீது தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இதே போல் கடந்த 21.05.2011 அன்று இரவு 10.15 மணியளவில் சுரேஷின் கட்சி அலுவலகத்தை பெட்ரோல் குண்டு வீசி எரித்துச் சேதப்படுத்தியதாக, அதே நாளில் இரவு 11.30 மணியளவில் சுரேஷுக்குச் சொந்தமான டாஸ்மாக் அருகில் இயங்கி வந்த  பாரில் வெடிகுண்டு வீசியதாகவும் கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன், பாலா என்ற பாலகிருஷ்ணன், கோபி, குமார் என்ற உதயகுமார், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகிய 5 பேர் மீது ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் தனித்தனியாக இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த இரு வழக்குகளும் தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த மூன்று வழக்குகளிலுமே, ”அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்தில் கிடையாது. சதி செய்ததாகவே அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்த வழக்குகளில் அத்துடன் அனைவரது மீதான குற்றச்சாட்டுகளும் நிருபிக்கப்படவில்லை” எனக்கூறி அனைவரையும் விடுதலை செய்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி குருமூர்த்தி உத்தரவிட்டார்.

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தற்போது அமைச்சராகவும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.கவின் செயலாளராகவும் உள்ளார். இதேபோல், 2 வழக்குகளில் முதல் எதிரியாக சேர்க்கப்பட்ட கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன், கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் அனிதா ராதாகிருஷ்ணனை எதிர்த்து அ.தி.மு.க வேட்பாளராகப்  போட்டியிட்டவர். அவர் தற்போது அதிமுகவில் இருந்து விலகி பா.ஜ.க-வில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



from Latest News

கருத்துரையிடுக

0 கருத்துகள்