பள்ளிகளில் நடக்கும் பாலியல் சீண்டல்கள் தொடர்பாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், அத்தகைய சம்பவங்கள் தொடர்கதையாக நடந்தேறி வருவது சமூக ஆர்வலர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. நெல்லையில் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்குப் பள்ளியின் தாளாளரே பாலியல் தொல்லை கொடுத்ததும் அதற்குத் துணையாக அவரின் மனைவியும் பள்ளித் தலைமை ஆசிரியையும் இருந்தது தெரியவந்திருக்கிறது.
நெல்லை மேலப்பாளையத்தில் அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டுவருகிறது. 6 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள அந்தப் பள்ளியில் 900 மாணவிகள் படித்து வருகிறார்கள். பள்ளியின் தாளாளராக குதுபுதீன் நஜீம் (47) என்பவர் உள்ளார். பள்ளியில் தலைமை ஆசிரியையாக காதரம்மாள் பீவி (57) பணியாற்றி வருகிறார். இந்தப் பள்ளியின் தாளாளர் குதுபுதீன் நஜீம், தனது அறைக்கு மாணவிகளை அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.
இரு தினங்களுக்கு முன்பு வழக்கம்போல குதுபுதீன் நஜீம் தனது அறைக்கு மூன்று மாணவிகளை அழைத்துச் சென்று அவர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறார். அதனால் அச்சம் அடைந்த மாணவிகள் அங்கிருந்து ஓட்டம் பிடித்ததுடன், நடந்த விவரங்களை சக மாணவிகளிடம் சொல்லி அழுதுள்ளனர். அதனால் ஆத்திரமடைந்த மாணவிகள், பள்ளிக்குள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த பெற்றோர் மற்றும் இஸ்லாமிய அமைப்பினரும் மாணவிகளுக்கு ஆதரவாகப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது. உடனடியாக அங்கு சென்ற மேலப்பாளையம் போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் மற்றும் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், முழுமையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். கல்வித்துறை அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்து அமைதியை ஏற்படுத்தினர்,
இந்த நிலையில், பாளையங்கோட்டை மகளிர் காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி மற்றும் போலீஸார் மாணவிகளிடமும் பள்ளி நிர்வாகத்தினரிடமும் விசாரணை நடத்தினார்கள். அதில் பள்ளித் தாளாளர் குதுபுதீன் நஜீம், மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.
இது தொடர்பாக மாணவிகள் சிலர் ஏற்கெனவே பள்ளித் தலைமையாசிரியை காதரம்மாள் பீவியிடம் புகார் தெரிவித்துள்ளனர். அவரும் தாளாளரின் மனைவி முகைதீன் பாத்திமா ஆகியோர், தாளாளர் மீது புகார் தெரிவித்த மாணவிகளை அழைத்து பாடங்களில் ஃபெயில் ஆக்கிவிடுவதாக மிரட்டியிருக்கிறார்கள். இது குறித்து வெளியில் சொல்லக் கூடாது என்றும் மிரட்டியுள்ளனர். இவை அனைத்தும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதனால் பள்ளி மாணவிகளிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட தாளாளர் உள்ளிட்ட மூவரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீஸார், சிறையில் அடைத்தனர்.
from Latest News

0 கருத்துகள்