திருப்பூரைச் சேர்ந்த பனியன் ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் சிவகுமார். இவருக்கு கடந்த மார்ச் 22ஆம் தேதி வாட்ஸ்ஆப் எண்ணுக்கு வெளிநாட்டு எண்ணிலிருந்து குறுந்தகவல் வந்துள்ளது. அதைத் தொடர்ந்து, வாட்ஸ்ஆப் மூலம் சிவகுமாரைத் தொடர்பு கொண்ட நபர், மூளை புற்றுநோய்க்கு மருந்து தயாரிப்பதற்கான மூலப்பொருள் இமாச்சல பிரதேசத்தில் இருந்து தாங்கள் வாங்கி வந்ததாகவும், தற்போது அங்குள்ள நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால், அந்த மூலப் பொருள்களை வாங்கி தங்களுக்கு அனுப்பி வைத்தால் அதற்கான கமிஷன் தொகையை தருவதாக கூறியுள்ளார்.
இதை நம்பிய சிவகுமார் புற்றுநோய் மருத்துக்கான மூலப் பொருள்கள் வாங்க அவர்கள் கூறிய வங்கிக் கணக்குக்கு பல தவணையாக மொத்தம் ரூ.98 லட்சத்து 28 ஆயிரத்தை செலுத்தி உள்ளார். நீண்ட நாள்களாகியும், மூலப்பொருள் வராததால், அதுகுறித்து திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீஸில் சிவகுமார் புகார் அளித்தார்.
இப்புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்த போலீஸார், முதற்கட்டமாக சிவகுமார் பணம் செலுத்திய வங்கி கணக்கிலிருந்த ரூ. 5 லட்சத்து 83 ஆயிரத்தை முடக்கினர். இதையடுத்து, ஆய்வாளர் சொர்ணவல்லி தலைமையில் உதவி ஆய்வாளர்கள் ரஜினிகாந்த், காவலர்கள் நவீன் கிருஷ்ணன், தனலட்சுமி, தங்கபாண்டி, ஹரிஹரசுதன், கருணாசாகர் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
மேலும், உதவி ஆய்வாளர் சையது ரபிக் சிக்கந்தர் தலைமையில் காவலர்கள் சத்தியேந்திரன், நவீன் குமார், சாதிக்பாட்சா ஆகியார் கொண்ட மற்றொரு தனிப்படை அமைக்கப்பட்டு மும்பை, டெல்லி பகுதிகளில் முகாமிட்டு விசாரணை நடத்தினர். அதில், கடந்த 19-ஆம் தேதி மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த ரமேஷ் விதாந்தே என்பவரை மும்பையில் வைத்து கைது செய்தனர். பின்னர், கடந்த 20-ஆம் தேதி டெல்லியில் தங்கியிருந்த நைஜீரியாவை சேர்ந்த ஜேம்ஸ் ஓசே போஹின் லாரன்ஸ், உகாண்டா நாட்டைச் சேர்ந்த பெண்ணான நசபா சரோம், மேற்கு டெல்லியைச் சேர்ந்த முகேஷ் குமார் மிஸ்ரா என்பவரையும் தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
விசாரணையில், இவர்கள் 4 பேரும் சேர்ந்து குழுவாக செயல்பட்டு வந்ததாகவும், வாட்ஸ்ஆப் மூலம் தொடர்புகொண்டு இதுபோன்று மோசடிகளில் ஈடுபடுவதும் தெரியவந்தது. அதன் படி, சிவகுமாரை தொடர்பு கொண்டு ஆசை வார்த்தை கூறி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 24 செல்போன்கள், 8 சிம் கார்டுகள், இரண்டு மடிக்கணினிகள், மோடம், ஏ.டி.எம். கார்டுகள், 2 பாஸ்போர்ட்டுகள், ரூ. 28 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
from Latest news

0 கருத்துகள்