கரூர் மாவட்டம், குளித்தலை அருகே இருக்கிறது நல்லாகவுண்டன்பட்டி. இந்த ஊரைச் சேர்ந்த சிறுவர், சிறுமிகள் மற்றும் பெண்கள் அடிக்கடி கூட்டாஞ்சோறு ஆக்கி சாப்பிடுவது வழக்கம். அந்த வகையில், நேற்றும் ஆறு வயது சிறுமி சுபஸ்ரீ தொடங்கி, 38 வயதான நவமணி வரை 15 க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமி மற்றும்பெண்கள் கூட்டாஞ்சோறு ஆக்கி சாப்பிட நினைத்துள்ளனர். அரிசியை வைத்து சமைத்து சாப்பிடுவதற்கு பதிலாக, இந்தமுறை வித்தியாசமாக நூடுல்ஸ் செய்து சாப்பிட நினைத்துள்ளனர்.
இந்நிலையில், தோகைமலையில் உள்ள ஒரு கடையில் இருந்து 15 நூடுல்ஸ் பாக்கெட்களை வாங்கி வந்துள்ளனர். அந்த கிராமத்தில் உள்ள பெருமாள் என்பவரின் வீட்டின் அருகில் அதை சமைக்க முடிவெடுத்துள்ளனர். இந்நிலையில், நூடுல்ஸ் செய்வதற்கு தேவையான எண்ணெய் வாங்கி வராததால், அருகில் உள்ள கதிர்வேல் என்பவரின் வீட்டின் ஷெல்ஃபில் வைக்கப்பட்டிருந்த களைக்கொல்லி மருந்தை, நல்ல எண்ணெய் என நினைத்து, அதனை கொண்டு நூடுல்ஸ் செய்து, 15 பேரும் சாப்பிட்டுள்ளனர். நேற்று மதியம் பன்னிரெண்டு மணியளவில் இப்படி கூட்டாஞ்சோறு அடிப்படையில் நூடுல்ஸை செய்து அனைவரும் சாப்பிட்டுள்ளனர்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2023-05/ad319d6c-f55f-407c-a69e-4220b39bb3e6/kulithalai.jpg)
இந்நிலையில், அனைவரும் அவரவர் வீடுகளுக்குச் சென்றுவிட, அதன்பிறகு மாலை 4 மணி போல் 15 பேருக்கும் வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், பறிபோன அந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள், அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களுக்கு அங்கே தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கூட்டாங்சோறு செய்து சாப்பிடும்போது, எண்ணெய்க்கு பதிலாக தவறுதலாக களைக்கொல்லி மருந்தை ஊற்றி சமைத்து சாப்பிட்டதால், 15 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ள சம்பவம், அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
from Latest news
0 கருத்துகள்