Header Ads Widget

இது ராஜஸ்தான் அரசியல்: முதல்வர் அசோக் கெலாட் - வசுந்தரா சந்திப்பின் பின்னணி!

ராஜஸ்தானில் முந்தைய வசுந்தரா ராஜே ஆட்சிக்காலத்தில் நடந்த ஊழல்களை முதல்வர் அசோக் கெலாட் விசாரிக்க மறுப்பதாகக் கூறி, காங்கிரஸின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான சச்சின் பைலட் தொடர்ந்து போராட்டம் நடத்திவந்தார். அவரின் போராட்டத்துக்கு வலுசேர்க்கும்விதமாக அசோக் கெலாட் நேற்று வசுந்தராவைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

ராஜஸ்தானில் அடுத்த சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. அங்கு முதல்வராக இருக்கும் அசோக் கெலாட் காங்கிரஸ் தலைமைக்குக் கட்டுப்படாமல் செயல்பட்டுவருகிறார் என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. அவர்மீது காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுக்க முடியாமல் கையைப் பிசைந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில் நேற்று ஜெய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் அசோக் கெலாட் கலந்துகொண்டார்.

இதே நிகழ்ச்சியில் பா.ஜ.க-வின் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜேவும் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் இருவரும் ஒன்றாகக் கலந்துகொள்ளவில்லை. ஆனால், நிகழ்ச்சிக்கு வந்திருந்த இரண்டு பேரும் தனியாகச் சந்தித்துப் பேசியிருக்கிறனர். இந்தச் சந்திப்பின்போது எதிர்க்கட்சித் தலைவர் ராஜேந்திர ரத்தோரே, சபாநாயகர் டாக்டர் ஜோஷி ஆகியோரும் கலந்துகொண்டனர். அவர்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படம் சோஷியல் மீடியாவில் வெளியாகி வைரலாகியிருக்கிறது. இந்தப் புகைப்படம் காங்கிரஸ் கட்சிக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியித்ருக்கிறது.

ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலில் எப்படியும் வெற்றிபெற்றுவிட வேண்டும் என்பதில் பா.ஜ.க தீவிரமாக இருக்கிறது. மற்றொரு பக்கம் சச்சின் பைலட்டை ராஜஸ்தானில் முன்னிலைப்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது. சச்சின் பைலட்டுக்கும், அசோக் கெலாட்டுக்கும் இடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக பகை இருந்துவருகிறது. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இரண்டு பேரையும் டெல்லிக்கு அழைத்து காங்கிரஸ் தலைமை சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி, அனுப்பிவைத்தது. அதன் பிறகு இருவரும் ஒருவரை ஒருவர் விமர்சித்துப் பேசவில்லை.

சச்சின் பைலட் - அசோக் கெலாட்

ஆனால் அதற்கு முன்பு முந்தைய வசுந்தரா ஆட்சிக்காலத்தில் நடந்த ஊழல் குறித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி சச்சின் பைலட் மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்தினார். ஆனால், அசோக் கெலாட் அந்தக் கோரிக்கையைக் கடைசிவரை ஏற்கவே இல்லை. தற்போது அசோக் கெலாட்டை வசுந்தராவும், பா.ஜ.க எதிர்க்கட்சித் தலைவர் ராஜேந்திராவும் சந்தித்துப் பேசியிருப்பது பல்வேறு அரசியல் யூகங்களுக்கு வழிவகுப்பதாக அமைந்திருக்கிறது.

அசோக் கெலாட் தன் ஆதரவாளர்களுடன் பா.ஜ.க-வில் சேர்ந்துவிடக்கூடும் என்றெல்லாம் பேசுகிறார்கள். ஏற்கெனவே சச்சின் பைலட்டை காங்கிரஸ் முதல்வராக்க விரும்பியபோது, அசோக் கெலாட் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் பதவி விலகப்போவதாக எச்சரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



from Latest news

கருத்துரையிடுக

0 கருத்துகள்