Header Ads Widget

உ.பி: தோட்டத்தில் கொய்யா பறித்ததால் ஆத்திரம்; தலித் இளைஞர் கட்டையால் அடித்துக் கொலை! - இருவர் கைது

உத்தரப்பிரதேச மாநிலம், அலிகாரைச் சேர்ந்தவர் ஓம் பிரகாஷ். அண்மையில் இவர் அடிபட்டு கிடப்பதாக, காவல்துறைக்குத் தகவல் கிடைத்திருக்குக்கிறது. சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், ஓம் பிரகாஷை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்திருக்கிறார்கள்.

அடித்துக் கொலை

அதைத் தொடர்ந்து, ஓம் பிரகாஷின் சகோதரர் சத்ய பிரகாஷ் காவல் நிலையத்தில், ``என் அண்ணன் தன்னை ஆசுவாசப்படுத்துவதற்காக வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, வழியில் ஒரு தோட்டத்திலிருந்து சில கொய்யாப்பழங்களை சாப்பிடுவதற்காக பறித்திருக்கிறான். அதனால் ஆத்திரத்தில் அவனை அடித்துக் கொன்றிருக்கிறார்கள். ஒரு சிறுவன் வந்து சொன்ன பிறகுதான் எங்களுக்கு இது தெரியவந்தது. மேலும், நாங்கள் தலித் என்பதாலேயே இப்படிச் செய்திருக்கிறார்கள். எனவே குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனப் புகார் அளித்திருந்தார்.

காவல்துறை

அவர் புகாரைப் பெற்றுக்கொண்ட போலீஸார், இருவரைக் கைதுசெய்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர், ``பழத்தோட்டத்தில் கொய்யாவைப் பறித்த ஓம் பிரகாஷை, கட்டைகளால் அடித்துக் கொன்றதாக பீம்சென், பன்வாரிலால் ஆகிய இருவரைக் கைதுசெய்திருக்கிறோம். குற்றம்சாட்டப்பட்ட இருவர்மீதும் இந்திய தண்டனைச் சட்டம் (IPC) பிரிவு 302 (கொலை) மற்றும் SC/ST சட்டத்தின் 3(2)(v) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது" எனத் தெரிவித்திருக்கின்றனர்.



from Latest News

கருத்துரையிடுக

0 கருத்துகள்